கச்சத்தீவு விவகாரம் - அடிப்படை தெளிவு இல்லாமல் பேசுவதா! பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி?
- உறியடி செய்திகள்

- Aug 18, 2023
- 3 min read

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா
கச்சத்தீவு விவகாரம் - அடிப்படை தெளிவு இல்லாமல் பேசுவதா! பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி?
தி.மு.கழகத் தலைவர்தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.8.2023) இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 14,000 பயனாளிகளுக்கு 88 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம்ப் அருகே மீனவர் மாநாடு இன்று ஆக, 18ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான 14 மாவட்டங்களில் இருந்து பல ஆயிர கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முதல்வரின் வருகைக்காக தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மீனவர் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மீனவர் மத்தியில் பேசிய போது.. மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை, 5000-ல் இருந்து ₹8000-ஆக உயர்த்தப்படும் எனவும், 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல், கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது.
மீன்பிடி தொழிலில் 5-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
மீன்வளத்துறை பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக மாற்றினோம்,
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது, இனி அந்த தொகை உயர்த்தப்பட்டு 8000 ரூபாயாக வழங்கப்படும்.
45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும், மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும், தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படு, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரிப்படும்,


விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 4,000ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு மீன்வள பல்கலையில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 5-ல் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம்.
கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு ரூ.62 கோடி நிவாரணம் வழங்கப்படும். 2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக 62.19 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீனவ சமுதாய மாணவர்களுக்கு சிறப்புக் பயிற்சி
குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி திட்டத்தில் 41 மீனவ சமுதாய மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண பாஜக அரசு என்ன செய்துள்ளது என தமிழக முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.!
இந்த நிலையில் பத்து சிறப்பு திட்டங்களை மீனவர் மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் அதில் 14 ஆயிரம் பயாளிகளுக்கு 88 கோடியே 90 லட்சம் மதிப்பெட்டியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5000 இருந்து 8000 ஆக வழங்கப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட வயதான மீனவர்களுக்கு நிவாரணத் தொகை மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சத்தீவு இலங்கை அரசிடமிருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டப்படும் என பத்து சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்தார்.
இம்மாநாட்டில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-

இங்கே இருக்கக்கூடிய சிலர் என்ன சொல்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
1971-ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியதுமே – அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.
கச்சத்தீவானது, இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டார். அதை மீறித்தான் 1974 ஜூன் 26-ஆம் நாள் கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய – இலங்கை பிரதமர்களால் போடப்பட்டது.
இது ஒப்பந்தம்தானே தவிர சட்டம் அல்ல! நல்லா கவனியுங்கள், அப்படி எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதைத் திமுகவும் ஆதரிக்கவில்லை. உடனடியாக, டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சந்தித்தார். கச்சத்தீவை தரக்கூடாது என்று வலியுறுத்துனார்.!


கச்சத்தீவு நமக்குச் சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார். அன்றைய சட்ட அமைச்சர் செ.மாதவன் அவர்களும் முதலமைச்சரோடு உடன் சென்றார். சென்னை திரும்பியதும் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் தலைவர் கலைஞர் கடிதம் எழுதினார்.
கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன.!

1954-இல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குப்பகுதிக் கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்குக் கப்பம்கூட கட்டியது கிடையாது. !
எனவே கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தான்.
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங், வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் ஆகியோரை சந்தித்து இந்த ஆதாரங்கள முதலமைச்சர் கலைஞர் கொடுத்திருக்கிறார்.!

''இலங்கைக்குக் கச்சத்தீவை தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து" என்று இதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அவர்கள் நாடாளுமன்றத்தில் முழங்கினார்
திமுக உறுப்பினராக இருந்த இரா.செழியன் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். வெளிநடப்பு செய்திருக்கிறார்.!
ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளே– அதாவது 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முத்தமிழறிஞர்,முதலமைச்சர் கலைஞர் கூட்டினார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாகவேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான்.!
அன்று முதல் இன்று வரை ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக செய்கிறார்கள். அது என்னவென்றால், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வது!

21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் தலைவர் கலைஞர். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நடத்தப்பட்டது. ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இந்தக் கூட்டங்களை நடத்துவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.!
தஞ்சையில் கலைஞர், சென்னையில் பேராசிரியர், அப்போது திருப்பெரும்புதூரில் இந்த அடியேன்தான் பேசினேன். இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக இந்தியாவோட ஒரு பகுதியை தாரை வார்த்தது என்று அடிப்படை அறிவும் இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையும் இல்லாமல், சிலர் பேசி வருவது வெட்கக்கேடானது! கண்டிக்கத்தக்கது!

கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும். எனவே இந்திய அரசு, இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு இப்போதாவது தொடங்கிட வேண்டும். பாஜக அரசு இந்த முயற்சியில் இறங்கவில்லை என்றால், அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் புதிய அரசு இதனை நிறைவேற்றும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்."
இவ்வாறு அவர் பேசினார்..




Comments