தொடங்கியது பருவமழை! தவறுகளுக்கு இடமின்றி!! மக்களுக்கு பணிசெய்வோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!!
- உறியடி செய்திகள்

- Nov 1, 2022
- 1 min read

சிறு தவறு கூட பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும். சிறு உதவி என்றாலும் அது பெரிய நல்லப் பெயரை உருவாக்கும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் தி.மு.கழக தலைவர். தமிழ்நாட்டின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள், அறிவுறுத்தல் கூறி பேசியதாவது.........
மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க வேண்டும்.
மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மக்களை காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு.அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள்,வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, தீயணைப்பு துறைகள் என அனைவரும் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.
தொலைபேசியிலோ,வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். மண்டல அளவில் பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்கள் அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர், மின்சாரவசதி கிடைப்பதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அரசுத்துறையினருடன் மக்களும் இணைந்து செயல்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும், மின்சாரம் சார்ந்த விபத்துகளை தடுக்க வேண்டும்.
அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு.
சிறு தவறு நிகழ்ந்தாலும் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில் சிறு உதவி என்றாலும் அது பெரிய நல்லப் பெயரை உருவாக்கும். .....
இவ்வாறு அவர் கூறினார்.
மணவை, எம்.எஸ்.ராஜா




Comments