தமிழ்நாடு அரசு குட்கா - பான் மசலா பொருட்களுக்கு தடைவிதிக்க! உச்சநீதிமன்ற அனுமதி!!
- உறியடி செய்திகள்

- Apr 26, 2023
- 2 min read

குட்கா தடை விதிக்க தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிடலாம்- ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை: உச்சநீதிமன்றம்
குட்கா, பான்மசலா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் 2018-ல் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீடும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு பெஞ்ச், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்றும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பர படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.

மேலும் புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை எனவும், தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் குட்கா தடை சட்டம் ரத்து என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் புகையிலை நிறுவனங்களின் ஏற்கனவே கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. கடந்த மாதம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், குட்கா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசாணை ரத்து உத்தரவுக்கு தடை விதித்தனர். குட்கா, பான்மசலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்ற வட்டாரத்தில் பரப்பரப்படன் பேசப்பட்டு வருகின்றது.




Comments