அதிமுக ஒருங்கிணைப்பு! எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடு! மனம் திறந்த செங்கோட்டையன்!
- உறியடி செய்திகள்

- Sep 5
- 2 min read

அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால், நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கட்சியில் அதிருப்தியில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (செப் 05) மனம் திறந்து பேச இருப்பதாக அறிவித்து இருந்தார். அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் போக வேண்டிய பேட்டி இது. ரொம்ப முக்கியமானது. முக்கியமான நேரம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். அதிமுகவை 1972ம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார்.
அவர் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியின் கிளைச் செயலாளராக பணியாற்றினேன். 1975ல் கோவையில் நடந்த பொதுக்குழுவில் பொருளாளர் ஆக நியமித்தார்கள். 1977ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிடுமாறு எம்ஜிஆர் அறிவுறுத்தினார். எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன்.
2 வாய்ப்புகள்
தமிழகத்தில் ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆளுமை மிக்க முதல்வராக விளங்கினர். ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு சோதனைகள் வரும் அன்றைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை பேணி காப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன.
இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போது கூட இந்த இயக்கம் உடை ந்துவிடக்கூடாது என்பதற்காக எனது பணிகளை மேற்கொண்டேன். இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பது தொண்டர்களின் நோக்கம் தான். அதிமுகவுக்காக பல தியாகங்களை செய்துள்ளேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசி உடன் இந்த இயக்கம், மீண்டும் தமிழகத்தில் அமைய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். 2016ம் ஆண்டிற்கு பிறகு தேர்தல் களம் எப்படி போராட்ட களமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் தேர்தல் களத்தில் நாம் வெற்றி பெற முடியும். பாஜவின் மூத்த தலைவர்கள் அழைப்பின் பேரில் தான் டில்லி சென்றேன்.
அதிமுகவை ஒன்றிணைக்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் 6 பேருடன் சென்று இ.பி.எஸ்ஸை சந்தித்தேன். அவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 2024ல் பா.ஜ., உடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் நாம் 30 இடங்களை வென்றிருப்போம்.
10 நாள்கள் கெடு
6 முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் அதனை ஏற்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் சேர்ந்தால் தான் வெற்றி நிச்சயம்.
அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கு நான் காலக்கெடு வைத்திருக்கிறேன். பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம். வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.




Comments