கரூர் சம்பவத்தில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது! அமைச்சர் கே.என்.நேரு குற்றசாட்டு!
- உறியடி செய்திகள்

- Oct 1
- 1 min read

தமிழகத்திற்கான எந்த பிரச்சனைகளிலும் குரல் கொடுக்காத பா.ஜ.க இந்த கரூர் மக்கள் விரோத சம்பவங்கள் மாதிரி நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கு கெட்ட பெயரை உண்டாக்குவதற்காக உடனடியாக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தமிழகத்தில் வேண்டுமென்றே பிரச்சனை உண்டு பண்ணுவதற்காக பா.ஜ.க இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது என்று தி.மு.கழக முதன்மைச்செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு தி.மு.கழக முதன்மைச்செயலாளர். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என் நேரு கூறியதாவது; “தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, முறையான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த கரூர் விவகாரத்தில் 8 பா.ஜ.க எம்.பி.,க்கள் குழு உடனடியாக தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்திற்கான எந்த பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க குரல் கொடுக்கவில்லை, எங்கே இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கு கெட்ட பெயரை உண்டாக்குவதற்காக துரிதமாக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். முதல்வர் கூட யாரைப் பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் வேண்டுமென்றே பிரச்சனை செய்வதற்காக பா.ஜ.க இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள், உண்மை என்ன என்பது அவர்களுக்கே தெரியும்.
இவ்வாறு அமைச்சர் கே.என் நேரு கூறினார்.




Comments