கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் : தனது துயரத்தை. நடிகர் விஜய் அழுத்தமான வார்த்தைகளால் வீடியோ பதிவு!
- உறியடி செய்திகள்

- Sep 30
- 2 min read

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்கள்.
அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது வரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 110 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூட்டநெரிசல் இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட த.வெ.க. நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று, நாமக்கல் - கரூர் பரப்புரைக்கு செல்ல விஜய் தனி விமானம் மூலம் சென்னை வந்துவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை, பேட்டி கொடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று (செப்டம்பர் 30) தனது எக்ஸ் பக்கத்தில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்
.

கருர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக வீடியோ வழியே பேசிய நடிகர் விஜய், தனது துயரத்தை அழுத்தமான வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அந்த வீடியோவில், என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. கரூரில் த.வெ.க எந்த தவறும் செய்யவில்லை.தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். சி. எம். சார்.. என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். .

இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். அதற்கு ஏற்ப இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாகத் தொடரும். என்னுடைய வலிகளை நீங்க புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி. விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன். இவ்வாறு அதில் விஜய் தெரிவித்துள்ளார்.




Comments