top of page
Search

திருவண்ணாமலை இளம் பெண் பலாத்கார விவகாரம். பழனிசாமி - அண்ணாமலை கண்டனம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 30
  • 1 min read
ree

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், உருவாகி உள்ளதாக தமிழகஅரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்


திருவண்ணாமலை மாவட்டம் புறவழிச்சாலை பகுதியில் தோப்பு பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது சகோதரி கண் முன்னரே பலாத்காரம் செய்ததாக இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.

ree

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு தமிழக அரசு தலைகுனிய வேண்டும்.மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ree

காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.


திமுக அரசின் மீதும், சட்டத்தின் மீதும், குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page