திருச்சி: த.வெ.க. விஜய் ஜெ. பாணியில் கேள்வி! தேர்தல் பரப்புரையை தொடங்கினார்!!
- உறியடி செய்திகள்

- Sep 13
- 2 min read

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்
த.வெ.க.தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் பரப்புரையை கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் 6 மணி நேர கால தாமதத்திற்கு
பின்னர் திருச்சி மரக்கடை பகுதியில் தொடங்கினார்.
அப்போதுஅவர் பேசும்போது, “அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண்.
மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். திருச்சிக்கென்று சிறப்பு வரலாறு உள்ளது.

டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை
திமுக-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள். எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக்காட்டுகிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள். உதவி செய்துவிட்டு சொல்லி காட்டுவதற்கு , உதவி செய்யாமலேயே இருந்திருக்கலாம்.

மின்சாரம், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்சினைகளில் நோ காம்ப்ரமைஸ் , நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது? வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? அரசு உதவியை செய்துவிட்டு, மக்களை கொச்சைப்படுத்துகிறது. மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? சொன்னீர்களே, செய்தீர்களா?” என்று விஜய் பேசினார். பின்னர், உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டும் கேள்வி எழுப்பினார். விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இதனையடுத்து அரியலூர் பரப்பரைக்கு புறப்பட்டு சென்றார்.




Comments